காரைநகர் – ஊர்காவற்றுறை படகுப்பாதை சீரின்மையால் அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும்; பாடசாலை மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 7.30 மணிக்குப் புறப்படும் படகுச்சேவையைத் தவறவிட்டால் மீண்டும் பலமணி நேரம் காத்திருந்தே பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தாம் அலுவலகங்களுக்கு தாமதமாகிச் செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக அரசாங்க ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் நிலையம், பாடசாலைகள், நீதிமன்றம் மற்றும் அரசாங்கத் திணைக்களங்கள் ஊர்காவற்றுறையில் காணப்படுகின்றது. இவைகளுக்கு கடமைகளுக்காகச் செல்லும் காரைநகர் மக்கள் இப்படகுப்பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
படகுச்சேவையின் நேரம் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதினால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்வதாக அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய வேளையில் இப்படகுச்சேவை நடைபெறுவதில்லையென்பதுடன், சம்மந்தப்பட்ட தரப்பினர் இதனைக் கவனத்திற்கொள்வதில்லையெனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.