யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்ரையில் ஐந்து மில்லியன் ரூபா செலவில் இளைப்பாறு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆணைமுகன் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.
யாழ்.காரைநகர் பிரதேச சபையினால் பி.எச்.டி.பி திட்டத்தின் கீழ் 50 இலட்சம் ரூபா செலவில் கசூரினா கடற்கரையில் இளைப்பாறு மண்டபம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த பிரதேச சபைத் தவிசாளர் உல்லாசப் பயணிகளின் நலன் கருதி மேலும் பல அடிப்படை வசதிகளை மேற்கொள்ள பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த வாரம் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு லேசர் மின்குமிழ்கள் கடற்கரையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அண்மையில் மக்கள் மீள்குடியமர்ந்த மடத்துவளவு பகுதியில் இரு லேசர் மின்குமிழ்களும், வலந்தைப் பகுதியில் ஒரு லேசர் மின்குமிழும் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் வே.ஆணைமுகன் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக காரைநகர் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்குதவற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையில் நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் முன்வைத்த கோரிக்கையை முன்வைத்தார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதேச சபை அடுத்த ஆண்டு முதல் காரைநகர் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் பிரதேச சபைத் தலைவருக்கு 2 இலட்சம் ரூபாவும், உபதலைவருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.