உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க யாழ்.மாவட்டத்தில் 6 லட்சத்து 96 ஆயிரத்து 587 பேர் தகுதி பெற்றுள்ளனர் என யாழ்.மாவட்டத் தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை 13 பிரதேச சபைகளுக்கும், 3 நகர சபைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 201 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மேற்படி தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் 9 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதில் 12 பேர் போட்டியிட முடியும் எனவும் அதில் 5 இளைஞர்கள் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு பிரதேசசபையிலும், நகர சபையிலும் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
பருத்தித்துறை, சாவகச்சேரி, வல்வெட்டித் துறை ஆகிய நகரசபை மற்றும் காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, வேலணை, நெடுந்தீவு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் தென் மேற்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் கிழக்கு, வடமராட்சி தென்மேற்கு, பருத்தித்துறை ஆகிய பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.