இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாணக்கிளை செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் நால்வருக்கு உயிர் காத்த மைந்தர்கள் விருது வழங்கிக்கௌரவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 2006 ஆம் ஆண்டு அல்லைப்பிட்டியில் நடைபெற்ற அசம்பாவிதங்களின் போது காயமடைந்த மக்களைத் துணிவுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதில் இந்த நால்வரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
அத்துடன் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை ஊரடங்கு நடைமுறையில் இருந்த சமயம் குடாநாட்டில் 24 மணித்தியாலமும் உயிர் காக்கும் சேவையில் இவர்கள் ஈடுபட்டனர்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் இளைஞர் இணைப்பாளர் தோ.ரமேஸ், சாரதிகளான எஸ்.சண்முகதாசன், ஜோதி, தொண்டர் திலிப்குமார் ஆகிய நால்வருமே இந்தக் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டவர்களாவர்.
இந்த நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க ஆளுநர் சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-உதயன்