சிறுவர் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது சிறுவர் நீதிமன்றம் நாளை வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியை பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரினால் திறந்துவைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார்.
இக்கட்டிட நிர்மாண திட்டத்திற்கான நிதியுதவியினை யுனிசெப் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். சிறுவர்களினால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு குறுகிய காலத்தினுள் இந்த நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முதலாவது சிறுவர் நீதிமன்றம் பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுமார் 6.1 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற கட்டிட தொகுதியை பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரினால் நாளை வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.