யாழ்.ஆரியகுளத்தில் சல்பீனியா தாவரம் செழித்து வளர்ந்து பரவியுள்ளது. குளத்திலுள்ள தாமரைகளை விட இந்த சல்பீனியாவே எங்கும் நிறைந்து காணப்படுகின்றது.
இதனால் குளத்தை அண்மித்த பகுதிகளில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதாகப் பிரதேச மக்கள் முறையிடுகின்றனர். இது சம்பந்தமாக யாழ்.மாநகர ஆணையாளர் மு.செ.சரவண பவவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது:சல்பீனியாவை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வார காலத்துக்குள் இந்தப் பணி முன்னெடுக்கப்படும்.
இந்தத் தாவரம் ஈரத் தன்மை கொண்டதாகக் காணப்படுவதால் அதில் நுளம்புகள் தங்கியிருக்கச் சாத்தியமுண்டு. இதனால் குடம்பிகள் மூலமாக நுளம்பு பெருகி சுற்றுச்சூழலுக்கு ஆபத்து வரலாம் எனப் பலராலும் சுட்டிக் காட்டப்படுகின்றது. சல்பீனியா வேகமாக வளரக் கூடிய ஒன்று. இதனை மருந்து மூலம் அழிக்கலாம் எனத் திட்டமிடப்பட்ட போதும் அது குளத்தில் உள்ள ஏனைய உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாது என்ற உத்தரவாதம் கிடைக்கப்பெறாததால் அந்த முறை கைவிடப்பட்டுள்ளது.
வருடாந்தம் படகு மூலம் மனித வலுவைப் பயன்படுத்தியே சல் பீனியா அகற்றப்படுகின்றது. அடுத்த இரண்டு வாரங்களில் இந்தப் பணி ஆரம்பமாகும் என்றார் சரவணபவ.