பருத்தித்துறை கிராமக் கோட்டுச் சந்தியில் முச்சக்கரவண்டிகளில் வந்த இளைஞர் கோஷ்டியொன்று இளங்குடும்பஸ்தரொருவரைப் பலமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது
கிராமக் கோட்டுச் சந்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மூன்று முச்சக்கர வண்டிகளில் வந்திறங்கிய 10 பேரைக் கொண்ட இளைஞர் கோஷ்டியொன்று அல்வாய், திக்கத்தைச் சேர்ந்த கமலநாதன் மகேஸ்வரன் வயது-30 என்ற குடும்பஸ்தரைப் பலமாகத் தாக்கியுள்ளது.
இச்சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பொதுமக்களும் இரு இராணுவத்தினரும் இருந்துள்ள போதும் எவராலும் இச்செயலைத் தடுக்க முடியவில்லை இச்சம்பவம் தொடர்பாக அறிந்து கொண்ட பருத்தித்துறைப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை
இக்கோஷ்டி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளானவர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பழைய தனிப்பட்ட பகை காரணமாகவே இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.