சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஓர் அம்புலன்ஸ் மட்டுமே சேவையில் உள்ளது. இதனால் அது யாழ்ப்பாணம் சென்றபின்னர் வரும் அவசர நோயாளர்களைத் தனியார் வாகனங்களில் பணம் செலுத்தி யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் அவலநிலை உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு, தென்மராட்சி பிரதேச மக்களுடன் கொடிகாமம், பளை, மருதங்கேணி, பூநகரி, வேரவில், முழங்காவில் போன்ற பிரதேச வைத்தியசாலைகளிலிருந்தும் அம்புலன்ஸ் மூலம் நோயாளர்கள் அழைத்து வரப்படு கின்றனர்.
இவர்களில் அவசர நோயாளர்கள் அவசர சிகிச்சையின் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மாதாந்தம் சராசரியாக 150 இற்கு மேற்பட்ட தடவைகள் சாவகச்சேரி வைத்தியசாலை அம்புலன்ஸ் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபடுகின்றது.
இந்த நிலையில் கடந்த மாதம் சாவகச்சேரி வைத்திய சாலையிலிருந்து இரு அம் புலன்ஸில் ஒன்று சுகாதார திணைக்களத்தின் திடீர் அறிவிப்பையடுத்து அதன் சாரதி யுடன் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
தற்போதுள்ள ஒரு அம்புலன்ஸ் 24 மணி நேரமும் நோயாளர்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஏற்றி இறக்கி வருகின்றது.
இந்த அம்புலன்ஸ் யாழ்ப்பாணம் சென்ற பின்னர் ஏனைய பிரதேச வைத்தியசாலைகளிலிருந்து கொண்டு வரப்படும் அவசர நோயாளர்கள் யாழ்ப்பாணம் சென்ற அம்புலன்ஸ் வரும்வரை காத்திருக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் நோயாளர்களே அதிகளவு பணம் கொடுத்து தனி யார் வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு அம்புலன்ஸ் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுவதால் சாரதி ஓய்வின்றியும் விடுமுறையின்றியும் கடமையாற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.