இன்றுவரை புலம்பெயர் தமிழர்களை பற்றி கேவலமாகவும், இளக்காரமாகவும் பல நகைச்சுவைகளை சொல்லிவரும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம். நான் அவுஸ்திரேலிய வந்து அதிகமாக சென்ற இடம் அநேகமாக இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளுக்குதான். ஒரு காரணம் எனக்கும் வேறு பொழுதுபோக்கு இல்லை ரெண்டாவது இலங்கையில் நம் பழைய மாணவர் சங்கம் இளையவர்களை எந்தளவுக்கு அணைத்துக்கொண்டது என்பதில் இருந்த சந்தேகமும்தான். ஒரு மாதத்தின் முன்பு ஆண்டு நிறைவுக் கூட்டத்துக்கு சென்ற போது வழக்கம் போல வீர முழக்கம் கேட்டது ஏற்கனவே கேட்டவைதானே என்று நான் அசட்டையாக இருந்தாலும் அன்று கேட்ட ஒரு விடயம் என்னை முழுக்க முழுக்க ஆச்சரியக் கடலில் தள்ளியது. இங்கிலாந்தின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணமாம் (Jaffna)!
நேற்று சும்மா நம் சுவின்பெர்ன் நூலகத்தில் மேய்ந்தபொழுது ஒரு புத்தகம் தட்டுப்பட எடுத்து வாசித்தால் அது 100 க்கு 100 வீதம் உண்மை. கதை இப்படி போகிறது பாருங்கள்.
முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் (தற்போது 985,000 குதிரைவலு) இயங்கி வந்தன. மரம், துணி, வயர்களால் உருவாக்கப்பட்ட இவை உலகப் போரின் முன் யுத்தத்திற்காய் பாவிக்கப்படவில்லை. முதலாம் உலகப்போரின் போது எதிரிகளை வேவு பார்க்கவும், குண்டுவீசவும் சிறந்த பொறியாக விமானம் கருதப்பட்டது. எனினும் அவற்றின் வடிவமைப்பின் காரணமாக அவை எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகின. விமானத்தை உருவாக்கும் திறன் ஒருபுறம் இருக்க அதை உருவாக்க தேவையான பணம் இன்றித் திணறியது இங்கிலாந்து அரசு. உடனே தன் காலனித்துவ நாடுகளுக்கு இந்த செய்தியை அனுப்பி வைத்தது. வரிகள் மூலமாக இந்த பணத்தை திரட்ட முடியாது என்று அறிந்த மலேசியாவை நிர்வகித்த டாக்டர். அல்மா பேக்கர் என்பவர் “போர்விமானதுக்கு உதவி செய்” (fund-a-fighter-plane) என்ற பிரசாரத்தை ஆரம்பித்தார். இந்த பிரசாரம் அதிக பணம் தருபவர்கள் ஆசைப்படும் பெயர் அந்த விமானத்துக்கு வைக்கப்படும் என்றும் உறுதி கூறியது.
யாழ் மல்லாகத்தை பூர்வீகமாகக் கொண்ட திரு. சுப்ரமணியம் அவர்கள் இந்த பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு யாழில் இருந்து அன்றே மலேசியாவில் குடியேறிய தமிழர்களிடம் பணம் சேர்த்து F.E.2b ரக விமானம் ஒன்றை பரிசாக அளித்தார். அன்றைய நாளில் இதற்காக கிட்டத்தட்ட 2250 ஸ்டெர்லிங் பவுண்ட் சேர்க்கப்பட்டது.
இந்த விமானம் இரட்டை சிறகுடைய (Biplane ரகம்) இரண்டு பயணிகளை கொண்டு செல்லக்கூடிய, குண்டு போடவும், அதே நேரம் துப்பாக்கிச் சமரிலும் ஈடுபடக்கூடிய விமானமாக காணப்பட்டது. ஈழத் தமிழர்களால் நிதி உதவி அளிக்கப்பட்டதாலும், வரலாற்றில் நம் பெயர் நிலைக்கும் என்ற நம்பிக்கையிலும் இவ் விமானத்திற்கு Jaffana என்று நம்மவர்கள் பெயர் சூட்டினார்கள். பிரித்தானியாவின் அரச விமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட Jaffna ஜெர்மனியர்களின் குண்டு மழைக்குள் தீரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தி முதலாம் உலகச் சமர் முடிவில் அருங்காட்சியத்தில் ஓய்ந்தது. கடல் கடந்த எங்கோ ஓர் தேசத்தின் நூற்றாண்டு கடந்து கற்பழிக்கப்பட இருக்கும் ஒரு ஊரின் பெயரில் உள்ள விமானம் தங்களை இந்தளவு ஆட்டிப்படைக்கும் என்று ஜெர்மனியர்கள் கனவிலும் நிலைக்கவில்லை.
நன்றி:- http://brinthapan.wordpress.com