பருத்தித்துறை நகரில் இந்தியப் புடைவை வியாபாரிகள், புடைவை வியாபாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து தற்காலிக விசாவுடன் யாழ்ப்பாணத்தில் வந்து தங்கியுள்ள நடமாடும் இந்தியப் புடைவை வியாபாரிகளால் தமது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக பருத்தித்துறை நகரப் புடைவைக் கடை உரிமையாளர்கள் சார்பாக அவர்களில் ஒருவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவர் தனது தெரிவித்த முறைப்பாட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நகரில் தமது கடைகளுக்கு அருகில் புடைவைகளைப் போட்டு இந்திய வியாபாரிகள் சிலர் வியாபாரத்தில் ஈடுபட்ட போது அவர்களை பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தோம். வியாபாரத்தை தாம் தடைசெய்ய முடியாது எனப் பொலிஸார் தெரிவித்து அவர்களை விடுவித்தனர்.
இதேவேளை, சுன்னாகம் பிரதேசத்தில் பொது இடங்களில் மற்றும் வீட்டுக்கு வீடு, இந்திய வியாபாரிகள் புடைவை வியாபாரம் செய்வதை அங்குள்ள பிரதேசசபை தடைசெய்துள்ளது.
இது தொடர்பாக நாங்கள் பருத்தித்துறை நகரசபைக்கும் தெரிவித்தும் எவ்வித பயனும் கிட்டவில்லை.நகரப் பகுதியில் எமது வியாபாரம் தடைப்படாமல் இருக்க இந்திய புடைவை வியாபாரிகளின் புடைவை வியாபாரத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என நகர புடைவை வியாபாரி வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பருத்தித்துறை புடைவை வியாபாரியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய வியாபாரிகள் புடைவை வியாபாரம் செய்வதை பொலிஸாரும், பருத்தித்துறை நகரசபையும் இணைந்து தடைசெய்ய வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.