கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் காலிங்கராசா ஹரிச்சந்திரன் 2010 ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் தெரிவில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.அகில இலங்கை ரீதியில் அறுநூறு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு போட்டியின் அடிப்படையில் அதிலிருந்து ஐம்பது மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பின்னர் 20 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சியொன்று நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் போட்டியாளர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இப்படைப்புகளில் மேற்படி மாணவனின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற முறையில், எதிர்காலத்தில் வீடொன்றை அமைப்பதற்கான மாதிரித் திட்டம் சிறப்பிடம பெற்றிருந்தது.
இவரின் திட்டமானது நாட்டுக்கு மிகவும் தேவையான மீளப் பயன்படுத்தக்கூடியதாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பசுமைக் கொள்கை கவனத்தில் எடுக்கப்பட்டே இவர் விருதுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
வீட்டிலிருந்து வெளியேறும் சேதனக் கழிவுகளைப் பயன்படுத்தி உயிர்வாயு உற்பத்தி செய்ய முடியும். வீட்டின் அமைப்பானது சுற்றாடலுக்குப் பாதகமில்லாமலும் குடியிருப்பாளர்களுக்கு வசதியுள்ளதாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதில், குடியிருப்பாளருக்கு இயற்கைக் காற்றைச் சுவாசிக்கவும் மழை காலத்தில் மழைநீர் உட்புகாதவாறும் வீட்டு மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. நீர் வீணாகாதவாறு சேமித்துப் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்த முடியும்.
இத்திட்டத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்படும் வீடுகளில் இவ்வடிவமைப்புப் பாவிக்கப்படுவதானது, சுற்றாடலுக்குத் தீங்கு ஏற்படாததுடன், ஆரோக்கியமானதொரு சுற்றாடலில் மக்கள் வாழக்கூடியதாக இருக்குமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இளம் விஞ்ஞானியாகத் தெரிவு செய்யப்பட்ட காலிங்கராசா ஹரிச்சந்திரனுக்கு விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்ற போது, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவருக்கு வெள்ளிப் பதக்கம் அணிவித்துக் கௌரவித்தார்.