யாழ்.வலய மட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் பதினான்கு வயதுப் பிரிவினருக்கான இறுதிப் போட்டி இன்று யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணியவில் ஆரம்பமான மூன்றாம் இடத்துக்கான போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து உரும்பிராய் இந்துக் கல்லூரி அணி மோதியது. இப் போட்டியின் ஆட்ட நேர முடிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி 3-0 என்ற கோல்க் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் பின்னர் நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். மத்திய கல்லூரி அணி விளையாடியது. இதில் முதல் பாதியாட்டம் வரை இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடின. இதில் இரு அணிகளும் எந்தவொரு கோலினையும் அடிக்கவில்லை.
இடைவேளையின் பின்னர் ஆட்டத்தில் மத்திய கல்லூரி ஒரு கோலினை போட்டு ஆட்டத்தை தமது பக்கம் திசைதிருப்பி இறுதியில் 1-0 என்ற கோல்க் கணக்கில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை வென்று வலயமட்ட சம்பியனைக் கைப்பற்றியது.