யாழ். பிராந்திய நீரியல்வளத்துறைத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் அத்திணைக்களத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல இலட்சம் பெறுமதியுடைய மேற்படி தங்கூசி வலைகளை தங்களிடம் திருப்பிக் கொடுத்தால் அதனை மாற்றுத் தொழிலுக்காவது பயன்படுத்த முடியும். ஆனால் இரண்டும் கெட்டான் நிலையில் வெறுமனே அத்திணைக்களத்தில் தங்கூசி வலைகள் குவித்து வைக்கப்பட்டு அழகு பார்க்கப்படுகிறதே தவிர வேறெதுவும் நடைபெறவில்லையென பாதிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 3 மாதகாலமாக இத்திணைக்களம், வடகடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை மீனவர்கள் பயன்படுத்தியபோது கைப்பற்றியதாகவும் இதுவரை அதனை அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் யாழ். பிராந்திய நீரியல்வளத்துறைத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ரவிந்திரன் தெரிவித்தார்.