யாழ்ப்பாணத்தில் திராட்சை செய்கைக்கான அதிக விளைச்சலை கொடுக்கக்கூடிய புதிய இன திராட்சைகள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட நிலையில், முதல் கட்டமாக தெரிந்தெடுக்கப்பட்ட செய்கையாளர்களுக்கு இவை வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட விவசாயத் திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் ஸ்ரீபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம், ஊரெழு, இளவாலை, உரும்பிராய், மருதனார்மடம், இணுவில் என பல இடங்களிலும் கடந்த காலத்தில் திராட்சை செய்கை மிகவும் பிரபல்யமடைந்திருந்துடன், அதிக வருமானத்தையும் பெற்றுக்கொடுத்தது.
மீண்டும் திராட்சை செய்கையை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புதிய இன திராட்சை இனங்களான ஷராட், சொனக்கா என்ற இரு திராட்சை இனங்கள் செய்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. 1,854 திராட்சைக்கன்றுகள் தெரிவுசெய்யப்பட்ட திராட்சை செய்கையாளர்களுக்கு முன்னோடியாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இத்திராட்சைக்கன்றுகளை பெறுவதில் திராட்சை செய்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்களாக இருந்தால் மேலும் இந்தியாவில் இருந்து திராட்சைக்கன்றுகள் தருவிக்கப்பட்டு செய்கையாளர்களுக்கு வழங்கப்படுமெனவும் யாழ். மாவட்ட விவசாயத் திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.