Subscribe:Posts Comments

You Are Here: Home » இந்து சமயம் » பிள்ளையார் கதை (வரத பண்டிதர்)

காப்பு

கரும்பு இளநீருங் காகரெள்ளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே – லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.
கணபதியே யிக்கதைக்குக் காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா – முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.

ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் – பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்
பொமுதுங் கொண்டக்கால் வராது கூற்று.

அதிகாரம்

பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரிறபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்வுவன் கதையே.

கதை

மந்தர கிரியில் வடபா லாங்கோர்
இந்துவளர் சோலை யிராசமா நகரியில்
அந்தண னெருவனு மாயிழை யொருத்தியுஞ்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
கடவுளா லயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
புதல்வரைத் தருகெனப் பொருப்பர சீன்ற
மதர்விழி பாகனை வழிபடு நாளின்
மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை யுமையாள் சிவனடி வணங்கிப்
பரனே சிவனே பல்லுயிர்க் குயிரே
அரனே மறையவற் கருள்புரிந் தருளென
அந்தவந் தணனுக் கிந்தநற் பிறப்பின்
மைந்தரில்லை யென்று மறுத்தர னுரைப்ப
எப்பரி சாயினு மெம்பொருட் டொருசுதன்
தப்பிலா மறையோன் றனக்கருள் செய்கென
எமையா ளுடைய வுமையாண் மொழியா
இமையா முக்க ணிறைவன் வெகுண்டு
பொண்சொற் கேட்டல் பேதைமை யென்று
பண்சொற் கேட்டல் பேதைமை யென்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப்
பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுமை யவளும் மனந்தளர் வுற்றுப்
பொன்றிடு மானுடைப் புன்பிறப் பெய்துதல்
நன்றல வென்றே நடுக்கமுற் றுரைப்பக்
கறைமிடற் றண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்
சென்றவண் வளர்ந்து சிலபகற் கழித்தால்
மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று
விடைகொடுத் தருள விலங்கன்மா மகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித்
தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்
பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற வியல்பின ளாகி
ஐயாண் டடைந்தபின் னன்னையு மத்தனும்
மையார் கருங்குழல் வாணுத றன்னை
மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
பிறப்பிறப் பில்லாப் பொரியோற் கன்றி
அறத்தகு வதுவைக் கமையேன் யானென
மற்றவன் றன்னையுன் மணமக னாகப்
பெற்றிட லரிதெனப் பெயர்த்தவர் பேச
அருந்தவ முயற்சியா லணுகுவே னியானெனக்
கருந்தட நெடுங்கட் கவுரியங் குரைத்து
மருமலி கமல மலர்த்தடத் தருகிற்
றருமலி நிழற்றவச் சாலைய தமைத்துப்
பணியணி பற்பல பாங்கியர் சூழ
அணிமலர்க் குழலுமை யருந்தவம் பயில
அரிவைத னருந்தவ மறிவோம் யாமென
இருவரு மறியா விமையவர் பெருமான்
மானிட மேந்தும் வண்ணம தொழித்து
மானிட யோக மறையவ னாகிக்
குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
மடமயி றவம்புரி வாவிக் கரையிற்
கண்ணுதல் வந்து கருணை காட்டித்
கண்ணுறுங் கூந்தற் றையலை நோக்கி
மீள்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவமிங் கியற்றுவ தென்றலுங்
கொன்றை வார்சடையனைக் கூடவென் றுரைத்தலும்
நன்றெனச் சிரித்து நான்மறை யோனும்
மாட்டினி லேறி மான்மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துட னாடிப்
பாம்பு மெலும்பும் பஃறலை மாலையுஞ்
சாம்பரு மணிந்து தலையோ டேந்திப்
பிச்சைகொண் முழலும் பித்தன் றன்னை
நச்சிநீ செய்தவம் நகைதரு முனக்கெனப்
பூங்கொடி யருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்கவ ணாணமுற் றணிமனை புகுதச்
சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுத லொழிகென மனமிகத் தேற்றிச்
சிந்துர வாணுதற் சேடியர் தாம்போய்த்
தந்தைதா யிருவர் தாளினை வணங்கி
வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
பாவைதன் செய்கையைப் பாற்றினா னென்றலுந்
தோட லர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத் தணிமனை கொணர்கென
மாடக யாழ்முரல் மங்கைய ரோடி
நீடிய புகழாய் நீயெழுந் தருளென
மைம்மலர்க் குழலி வந்தெனை யழைக்கில்
அம்மனைப் புகுவனென் றந்தண னுரைத்தலும்
பொற்றொடி நீபோய்ப் பொய்கை யினின்ற
நற்றவ முனியை நடத்திக் கொணர்கெனச்
சிவனை யிகழ்ந்த சிற்றறி வுடையோன்
அவனையான் சென்றிங் கழைத்திடே னென்று
சிற்றிடை மடந்தை சீறின ளாகி
மற்றைய மாதர் மதிமுக நோக்கி
நெற்றியிற் கண்ணுடை நிமலுக் கல்லதென்
பொற்பமர் வேட மறையவன் றனக்கு
யான்வெளிப் படுவ தில்லையென் றிசைப்ப
மலையிடை வந்த மாமுனி தன்னை
இணையடி தொழுத லிளையோர்க் கியல்பெனத்
தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுத லொழிந்து
தாய்சொன் மறுத்தல் பாவமென் றஞ்சி
ஆயிழை தானு மவனெதிர் சென்று
சுற்றிவந் தவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் றன்னை மனையிற் கொணர்ந்து
ஆதியம் பகவற் கன்ப னாகும்
வேதியன் பழைய விருத்தனென் றெண்ணி
ஆசனம் நல்கி யருக்கிய முதலாப்
பாத பூசனங்கள் பண்ணிய பின்னர்ப்
போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி யழகிய பலாச்சுளை
தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
அந்தணன் றன்னை யமுதுசெய் வித்துச்
சந்தனங் குங்குமச் சாந்திவை கொடுத்துத்
தக்கோ லத்தொடு சாதிக் காயும்
கர்ப்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை யடைக்காய் விளங்கிய பொன்னின்
ஒள்ளி யதட்டி லுகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து
தவமறை முனிவனைத் தாளினை வணங்கத்
தேனமர் குழலி திருமுக நோக்கி
மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்
நெற்றியி னயனமுந் நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத் திலங்கக்
கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக்
கரந்ததன் னுருவங் காட்டி முளிற்ப
மரகத மேனி மலைமக டானும்
விரைவொடங் கவனடி வீழ்ந்திறைஞ் சினளே
அரியய னிந்திர னமரர் விஞ்சையர்
கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவ ரவுண ரிராக்கதர்
பூத ரியக்கர்கிம் புருட ரலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாக்
கணிக்கரும் பதினெண் கணத்தி லுள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந் ததற்பின்
மன்றலங் குழலிக்கு வதுவைநாட் குறித்துத்
தென்றல் வந்திலங்கு முன்றி லகத்துப்
பொன்றிகழ் பவளப் பொற்கா னாட்டி
மாணிக்க கத்தால் வளைபல பரப்பி
ஆணிப்பொற் றகட்டா லழுகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை து}க்கிப்
பத்திக டோறும் பலமணி பதித்துத்
தோரண நாட்டித் துகில்விதா னித்துப்
பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப்
பத்திப் படாமுளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியு நாட்டிப்
பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மீடற்றனைக
குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமக டன்னைத்
திருமணக் கோலஞ் செய்தன ராங்கே
எம்பி ரானையு மிளங்கொடி தன்னையும்
உம்ப ரெல்லா மொருங்குடன் கூடிக்
கடலென விளங்குங் காவணத் தன்னிற்
சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையின்
மறைபுகழ்ந் தேத்த மகிழ்த்துட னிருத்திப்
பறையொ லியோடு பனிவளை யார்ப்ப
வதுவைக் கேற்ற மறைவிதி நெறியே
சதுர்முக னோமச் சடங்குக னியற்றத்
தறுகலற் றொளிபொற் றாலி பூட்டிச்
சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ வெரிவலம் வந்து
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதணி கருங்குழற் பூவை தன்னுடனே
ஓதநீர் வேலிசூ ழுஞ்சையம் பாதிபுக
ஏரார் வழியி னெண்டிசை தன்னைப்
பாரா தேவா பனிமொழி நீயென
வருங்கருங் குழலாண் மற்றுமுண் டோவெனத்
திருத்திழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்
டொளிர்ம ணிப்பூணா ளுரவோ னுடனே
இவ்வகை யாய்விளை யாடுவோ மீங்கென
அவ்வகை யரனு மதற்குடம் பட்டு
மதகரி யுரித்தோன் மதபரி யாக
மதர்விழி யுமைபிடி வடிவ மதாகிக்
கூடிய கலவியற் குவலயம் விளங்க
நீடிய வானோர் நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க வானினம் பெருகச்
செந்தழல் வேள்விவே தாகமஞ் சிறக்க
அறப்பல பெருக மறப்பல சுருங்கத்
திறம்பல வரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்பு மைக்கையோ
டைங்கர தலமு மலர்ப்பத மிரண்டும்
பவளத் தொளிசேர் பைந் துவர்வாயுந்
தவளக் கிம்புரித் தடமருப் பிரண்டுங்
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்
போழைபோ லகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியி னயனமு முப்புரி நு}லுங்
கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்
தங்கிய முறம்போற் றழைமடிச் செவியுமாய்
ஐங்கரத் தண்ணல் வந்தவ தரித்தலும்
பொங்கர வணிந்த புண்னிய மூர்த்தியும்
மங்கை மனமிக மகிழ்ந்துட னோக்கி
விண்ணுலோர்களும் விரிந்த நான் முகனும்
மண்ணு ளோர்களும் வந்துனை வணங்க
ஆங்கவர் தங்கட் கருள் சுரந்தருளித்
தீங்கது தீர்த்துச் செந்நெறி யளித்துப்
பாரண மாகப் பலகனி யருந்தி
ஏரணி யாலின்கீ ழினிதிரு வென்று
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்
காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து
தெய்வ நாயகன் சிறந்திளி திருந்தபின்
வான வராலு மானு டராலுங்
கானமர் கொடிய கடுவி லங்காலுங்
கருவி களாலுங் கால னாலும்
ஒருவகை யாலு முயிர ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்
வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயமொத் தடற்படை சூழக்
கைம்முகம் படைத்த கயமுகத் தவுணன்
பொன்னுல கழித்துப் புலவரை வருத்தி
இந்நிலத் தவரை யிடுங்கண் படுத்திக்
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டேங்கி
அடுத்தொழிற் குலிசத் தண்ணலு மமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
அஞ்சலீ ரென்றவர்க் கபயங் கொடுத்தே
அஞ்சுகைக் கரிமுகத் தண்ணலை நோக்கி
ஆனைமா முகத் தவுணனோ டவன்றன்
சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி
வென்றுவா வென்று விடைகொ டுத்தருள
ஆங்கவன் றன்னோ டமர்பல வுடற்றிப்
பாங்குறு மவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்
கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை யொடித்தவ னுரத்திற்
குற்றிட வெறிந்தான் குருதிசேர்ந் திடவே
சோர்ந்த வன்வீழ்ந்து நுண்ணென வெழுந்து
வாய்ந்த மூடிகமாய் வந்தவன் பொரவே
எந்தை விநாயக னேறின னிப்பால்
எறிந்த வெண்மருப்பங் கிமைநொடி யளவிற்
செறிந்தது மற்றவன் றிருக்கரத் தினிலே
வெல்வைக் கதிர்வேல் விழிபடைத் தருளும்
வல்லவை தனைத்தன் மளையென மணந்தே
ஒகையோ டெழுந்தாங் குயர்படை சூழ
வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்முக கேறுந்
திருச்செங் காட்டிற் சிவனை யர்ச்சித்துக்
கணபதீச் சுரமெனுங் காரண நாமம்
கணபதி புகழ்தரு பதிக்குண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ
இங்குவந் தன்புட னெய்திய பின்னர்க்
கணங்களுக் கரசாய்க் கதிர்முடி சூட்டி
இணங்கிய பெருமைபெற் றிருந்திட வாங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்
யாவரும் வந்திவ னேவல் செய்திடுநாள்
அதிகமா யுரைக்கு மாவணித் திங்களின்
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென் றெண்ணி
மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள்
ஒப்பரும் விரதத் துறுமொரு சதுர்த்தியில்
நேற்று நற்பூசை நுடங்கா தாற்றிப்
போற்றி செய்திட்டார் புலவ ரைக்கரனை
மருமலர் து}வும் வானவர் முன்னே
நிருமலன் குமர னிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழு தடியிணை போற்ற
வனைகழற் சந்திரன் மனச்செருக் கதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்
தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டன னகைத்தான் கரிமுகக் கடவுளுங்
கொண்டனன் சீற்றங் குபேரனை நோக்கி
என்னைக் கண்டிங் கிழந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவ ருரைக்கு மித்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்
அழிவு மெய்துவரென் றசனிபோற் சபித்தான்
விண்ணவ ரெல்லா மிகமனம் வெருவிக்
கண்ணருள் கூருங் கடவுளித் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டன னந்நாண்
மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்
றிதயத் தெண்ணி யாவரும் நோற்றார்.

இப்புவி மாந்த ரியம்பிய விரதம்
வைப்புட னோற்ற வகையினிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத் துதித்த
தருமனு மிளைய தம்பி மார்களுந்
தேவகி மைந்தன் றிருமுக நோக்கி
எண்ணிய விரத மடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்புண் டாகவுஞ்
செருவினி லெதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும்
எந்தத் தெய்வ மெவ்விர தத்தை
வந்தனை செய்யில் வருநமக் குரையெனப்
பாட்டளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீரெனக் கிளர்த்துத லுற்றான்
அக்கு நீறனியு மரன்முத லளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி
ஓடவைத் திடும்பொன் னொத்தொளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்
கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன்
சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
ஒருகையிற் றந்த மொருகையிற் பாசம்
ஒருகையின் மோதக மொருகையிற் செபஞ்செய்
உத்தம மாலையோ னுறுநினை வின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்
என்றிமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தருந்திரு நாமம் படைத்தோன்
புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும்
வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்க ளுஞற்றிடும் போதும்
ஆங்கவன் றன்னை யருச்சனை புரிந்தாற்
றீங்குறா தொல்லாஞ் செயமுன் டாகுங்
கரால மைந்துடைக் கணபதிக் குரிய
விரதமொன் றுளதை விரும்பி நோற்றவர்க்குச்
சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியி னினைந்த பொருள்கை கூடும்
மேவலர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு
நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்
விரித்தெமக் குரைத்திட வேண்டுமென் றிரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
தேருநீ ராவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறா தியற்றி
அத்தின மதனி லைங்கரக் கடவுளைப்
பத்தியோ டர்ச்சனை பண்ணுதல் வேண்டும்
வெள்ளியாற் பொன்னால் விளங்கு மங்கவன்றன்
ஒள்ளிய வருட்டிரு வுருவுண் டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசிலா மண்ணா லமைந்தலுந் தகுமால்
பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி து}க்கிக்
கோடிகங் கோசிகங் கொடிவிதா னித்து
நீடிய நு}ல்வளைஇ நிறைகுடத் திருத்தி
விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
சிந்தையி னினைந்து தியானம் பண்ணி
ஆவா கனமுத லர்க்கிய பாத்தியம்
வாகா ராச மனம்வரை கொடத்து
ஐந்தமிர் தத்தா லிபிடே கித்தக்
கந்தஞ் சாத்திக் கணேச மந்திரத்தால்
ஈசுர புத்திர னென்னு மந்திரத்தான்
மாசக லிரண்டு வத்திரஞ் சாத்திப்
பொருந்துமை சுதனாப் புகலுமந் திரத்தாற்
றிருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறு குடனிரு பத்தொரு விதமாச்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே
உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்
ஏக தந்த னிசுர புத்திரன்
ஆகு வாகன னருடரு விநாயகன்
சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி யென்னு நாமங்களால்
ஆரம் பத்துட னர்ச்சனை பண்ணி
மோதக மப்ப முதற்பணி காரந்
தீதகன் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு
தரித்திடு நெட்டிலைத் தமைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பாறயிர் போனகம்
விருப்புள சுவைப்பொருள் மிகவு முன்வைத்து
உருத்திரப் பிரியவென் றுரைக்கு மந்திரத்தால்
நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நா னான்குப சாரமும்
மற்றவன் றிருவுள மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி யிருபிறப் பாளர்க்
குண்ணறு சுவைசே ரோதன நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை
அந்தணர்க் கீந்திட டருச்சகன் றனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்
தரித்தவத் திரத்துடன் றானமாக் கொடத்து
நைமித் திகமென நவிறரு மரபால்
இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்
திண்ணிய செருவிற் செயமிகப் பெறுவர்
அரனிவன் றன்னைமுன் னர்ச்சனை பண்ணிப்
புரமொரு மூன்றும் பொடிபட வெரித்தான்
உருத்திர னிவனை யுபாசனை பண்ணி
விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை யிவன்றா ளர்ச்சனை பண்ணிப்
பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாட மயந்தி
அன்னா னிவனை யர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை யடைந்தாள்
ஐங்கரக் கடவுளை யர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து
தெசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
பகிரத னென்னும் பார்த்திவ னிவனை
மதிதலந் தன்னின் மலர்கொ டர்ச்சிந்து
வரநதி தன்னை வையகத் தழைத்தான்
அட்ட தேவதைகளு மர்ச்சித் திவனை
அட்ட போகத்துட னமிர்தமும் பெற்றார்
உருக்மணி யென்னு மொண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்றான்
கொண்டு போமளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொ டர்ச்சித்துத்
தாரியின் மறித்தவன் றனைப்புறங் கண்டு
யாமு மங்கவளை யின்புறப் பெற்றோம்
புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
இப்புவி தன்ளி லெண்ணி லருளரால்
அப்படி நிவிரு மவனை யர்ச்சித்தால்
எப்பொருள் விரும்பினீ ரப்பொருள் பெறவீர்
என்றுகன் றெரிந்தோ னெமுத்திவை யுரைப்ப
அன்றுமுற் றருமனு மனுகரு மிவனைப்
பூசனை புரிந்து கட் புலளிலான் மைந்தரை
நாசனம் பண்ணி நராதிப ராகிச்
சிந்தையி னிளைத்தவை செகத்தினிற் செயங்கொண்
டந்தமில் செல்வத் தரசியல் பெற்றார்.

ஈங்கிது நிற்க விவ்விர தத்தியல்
ஓங்கிய காதைமற் றொன்றுரை செய்வாம்
கஞ்சநான் முகன்றருங் காசிபன் புணர்ந்த
வஞ்சக மனத்தாண் மாயைதன் வயிற்றிற்
சூரனென் றொருவனுந் துணைவருந் தோன்றி
ஆர்கலி சூழ்புவி யனைத்தையு மழித்தே
சீருடைச் சுவர்க்கத் திரவளங் கொடுத்தும்
புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரந் தீய நெறிநடத் துதலால்
ஆயிரங் கண்ணனு மாமரரு முனிவரும்
நீயிரங் கெமக்கென நெடுங்கரங் கூப்பி
இரசத கிரியுறை யிறைவனை வணங்கி
வரமிகுஞ் சூரன் வலிமைக ளுரைக்கச்
சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக்
கதிர்விடு வடிவேல் கரதலத் தேந்தும்
புதல்வனைத் தருவோம் போமி னீரென
அமரர் கோனுக் கரன்விடை கொடுத்துச்
சமரவேல் விழித் தையலுந் தானுங்
கூடிய கலவியிற் கூடா து}டலும்
ஓடிய வானோ ரொருங்குடன் கூடிப்
பாவகன் றன்னைப் பரிவுட னழைத்துச்
சூரன் செய்யுந் துயர மெல்லாம்
ஊரர வணிந்தோற் குரையென வுரைப்பக்
காமனை யெரித்த கடவுளென் றஞ்சிப்
பாவகன் பயமுறப் பயமுனக் கேதென
உற்றிடுங் கரதலத் துன்னையே தரித்தான்
நெற்றியி னயனமு நீயே யாதலிற்
குற்ற மடாது கூறுநீ சென்றென
வாணவர் மொழிய மற்றவன் றானுந்
தானுமச் சபையிற் றரியா தேகி
எமையா ளுடைய வுமையா ளுடனே
அமையா வின்பத் தமர்ந் தினிதிருந்த
பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும்
ஒள்ளிய மடந்தை யொதுங்கி நாணுதலுந்
தௌ;ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே
ஆறுமுகப் பிள்ளையை யவன்கையி லீதலும்
வறியவன் பெற்ற வான்பொருள் போலச்
சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து
வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப
நீதி யோடு நின்று கையேந்திப்
போதநீள் வாயுவும் பொறுக்க வொண்ணாமற்
றரும்புனற் கங்கை தன்கையிற் கொடுப்பத்
தரும்புனற் கங்கையுந் தாங்கவொண் ணாமற்
பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
தண்ணார் வதனத் தாமரை யாறுங்
கண்ணா றிரண்டுங் கர மீராறுந்
து}ணெனத் திரண்ட தோளீ ராறும்
மாண யிலாதி வான்படை யுங்கொண்
டறுமுகக் கடவுளங் கவதரித் திடலும்
மறுகிய வும்பர் மகிழ்ந் துடன்கூடி
அறுமீன் களைப்பா லளித்தி ரென்றனுப்ப
ஆங்கவர் முலையுண் டறுமுகன் றானும்
ஓங்கிய வளர்ச்சி யுற்றிடு நாளில்
விமலனு முமையும் விடையுகைத் தாறு
தலைமக னிருந்த சரவணத் தடைந்து
முருகலர் குழலுமை முலைப்பா லு}ட்ட
இருவரு மின்பா லெடுத்தெடுத் தணைத்துத்
தேவர் தம்படைக்குச் சேனா பதியெனக்
காவல்கொண் டளிக்கக் கதிர்முடி சூட்டி
அயில்வேன் முதற்பல வாயுதங் கொடுத்துத்
திசையெலாஞ் செல்லுந் தேருமொன் றுதவிப்
பூதப் படைகள் புடைவரப் போய்நீ
ஓதுறு மவுணரை யொறுத்தி டென்றனுப்ப
இருளைப் பருக மிரவியைப் போலத்
தகுவரென் றவரைச் சமரிடை முருக்கிக்
குருகுபேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
மருமமுந் துளைபட வடிவேல் விடுந்தே
யாவரும் வியப்புற விந்திரன் மகளாந்
தேவகுஞ் கரியைத் திருமணம் குணர்ந்திட்
டமரர் கோனுக் கமருல களித்துக்
குமர வேளுங் குவலயம் விளங்க
அமரா வதியி லமர்ந்தினி திருந்தான்
சமரவே லுடைச் சண்முகன் வடிவுகண்
டமரர் மாத ரனைவரும் மயங்கி
எண்டருங் கற்பினை யிழந்தது கண்டே
அண்ட ரெல்லா மடைவுடன் கூடி
மாதொரு பாகனை வந்தடி வணங்கி
மருமலர்க் கடம்பனெம் மாநகர் புகாமல்
அருள்செய வேண்டுநீ யம்பிகா பதியென
இமைய ருரைப்ப விறையவன் றானுங்
குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்
காவல்கொண் டேவினை கட்டறுத் தருளுஞ்
சேவலங் கொடியோன் றேசம் போகத்
திருந்திழை யுமையா னருந்துய ரெய்தி
வருந்திமுன் னிற்க மங்கையைப் பார்த்து
மங்கை நீதான் வருந்துத லொழிகுதி
அங்கையாற் சூதெறிந் தாடுவோம் வாவென
வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
குன்றமென் முலையாள் கூறிய சமயம்
புற்றர வணிந்த புனிதனைக் காணவங்
குற்றனன் றிருமா லு}ழ்வினை வலியாற்
சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
மிக்கதோர் சூது விருப்புட னாடச்
சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் றோற்ப
இன்பவாயி தழுமை யான்வென் றேனென
எம்பெரு மானும் யான்வென் றேனென
ஒருவர்க் கொருவ ருத்தரம் பேசி
இருவருஞ் சாட்சிய மிவனைக் கேட்ப
மாமனை வதைத்த மான்முக நோக்கிக்
காமனை யெரித்தோன் கட்கடை காட்ட
வென்ற நாயகி தோற்றா ளென்றுந்
தோற்ற நாயகன் வென்றா னென்றும்
ஒன்றிய பொய்க்கரி யுடனங் குரைப்பக்
கன்றிய மனத்தொடு கவுரி யங்குருத்து
நோக்கி யிருந்தும் நுவன்றிலை யுண்மை
வாக்கினி லொன்றாய் மனத்தினி லொன்றாய்
மைக்கரி யுரித்தோன் வதன நோக்கிப்
பொய்க்கரி யுரைத்த புன்மையி னாலே
கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க்
கடகரி முகத்துக் கடவுள் வீற்றிருக்கும்
வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்
முளரிகள் பூத்த முகினிறத் துருப்போய்த்
துளவணி மருமனுந் துணைவிழி யிழந்தே
ஆண்டரைக் கணத்தி லாயிரம் யோசனை
நீண்டபைப் பாந்த ணெட்டுட லெடுத்து
வளர்மருப் பொன்றுடை வள்ளல் வீற்றிருக்குங்
கிளர்சினை யாலின் கீழ்க்கிடந் தனனால்
திரிகடக் கரியின் றிருமுகக் கடவுளும்
வழிபடு மடியார் வல்வினை தீர்த்தே
எழில்பெறு வடமரத் தின்கீழ் ருந்தான்
கம்ப மாமுக் கடவுடன் பெருமையை
அம்புவி யோருக் கறிவிப் போமென
உம்ப ருலகத் தோரெழு கன்னியர்
தம்பநு} லேணியற் றாரணி வந்து
கரிமுகக் கடவுளைக் கைதொழு தேத்திக்
கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்தபின் னாளில்
ஆர்த்த கலிங்கத் தணியிழை வாங்கி
இருபத் தோரிழை யின்புறக் கட்டி
ஒருபோ துண்டி யுண்டொரு மனமாய்
வேதத் தாதியும் பூமியி லெழுந்தும்
ஆதி விநாயகற் கான வெழுந்தும்
மூன்றெழுத் ததனான் மொழிந்த மந்திரமும்
தேன்றருங் குழலியர் சிந்தையுட் செபித்தே
உரைதரு பதினா றுபசா ரத்தால்
வரைமகன் மதலையை வழிபா டாற்றி
இருகது நாளு மிப்படி நோற்று
மற்றைநா ளைங்கர மாமுகன் பிறந்த
வற்றைநாட் சதயமு மாறாம் பக்கமுஞ்
சேருமத் தினத்திற் றெளிபுன லாடி
வாரண முகத்தோன் வதிபெருங் கோயில்
சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக்
குலவுபொற் கலைகள் கொடு விதானித்து
உலர்பல தொடுத்திடு மாலைக ணாற்றிக்
கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை
மலைமுகக் கடவுளை மஞ்சன மாட்டிப்
பொற்கலை நன்னு}ற் பூந்துகில் சாத்திச்
சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிக்
செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
குருத்து மல்லிகை கோங்கொடு பிச்சி
கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழன் மகிழிரு வாட்சி
தாமரை முல்லை தழையவிழ் கொன்றை
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை
காந்த ளாத்தி கடம்பு செவ்வந்தி
வாய்ந்த நல்லெருக்கு மலர்க்கர வீரம்
பச்சிலை நொச்சி படர்கொடி யறுகு
முத்தலைக் கூவிள முதலிய சாத்தித்
து}ப தீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே
அப்ப மோதக மவலௌ; ளுண்டை
முப்பழந் தேங்காய் முதிர்மொழிக் கரும்பு
தேனுடன் சர்க்கரை செவ்விள நீரான்
பானறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்
பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
நோற்பது கண்டு நோலா திருந்த
பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
யாப்புறு கொங்கையீர் யானு நோற்பேனென
ஆங்கவன் றனக்கும் வேண்டுவ தளித்துப்
பாங்கொ டிவ்விரதம் பரிந்து நோற்பித்தார்
அண்டர் நாயகனா மைங்கர னருளால்
விண்டுவும் பண்டுள வேடம் கெற்றே
உஞ்சைமா நகர்புகுந் துமையொடு விமலன்
கஞ்சநாண் மலர்ப்பதங் கைதொழு திடலும்
பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின்
வெஞ்சின மிகுந்து விமலனை நோக்கி
யானிடுஞ் சாப நீங்கிய தேதென
மானெடுங் கண்ணி மணிக்கத வடைப்ப
இறையவ னிதற்குக் காரண மேதென
மறிகடற் றுயிலு மாயவ னுரைப்பான்
பிறைமருப் பொன்றுடைப் பிள்ளையன் றெனக்குத்
தந்தருள் புரிந்த தவப்பய னீதெனச்
சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
பூங்கொடி யடைத்த பொற்றாழ் நீங்கச்
சாங்குமுன் னுரைத்த சக்கர பாணி
இக்கதை சொல்ல வக்கணி சடையனும்
மிக்கநல் விரதம் விருப்புட தோற்றபின்
மாதுமை யடைத்த வன்றாழ் நீக்கி
நாதனை நணுகிட நம்பனு நகைத்தான்
தானோ வந்து நகையா னதுவெனத்
தேனேர் மொழியா டெளியக் கூறென
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில்
உன்மக னேன்பி னுறுதி யறிந்து
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென
அந்தமி லரனை யாயிழை வணங்கிப்
பொருஞ் சூரறவேல் போக்கிய குமரன்
வரும்படி யானும் வருத்தி நோற்பேனென
இறைவன் கதைசொல வேந்திழை நோற்றபின்
குறமட மகளைக் குலமணம் புரிந்தோன்
சுடர்வடி வேலோன் றொல்வினை தீர்ந்து
தாதுமை வண்டுழுந் தாமத் தாமனை
மாதுமை யாளை வந்து கண்டனனே
கண்ணநீ கண்ணிலாக் கட்செவி யாகெனக்
தண்ணறுங் குழலுமை சாபமிட் டதுவும்
அக்கு நீறணியு மான்முத லளித்த
விக்கின விநாயகன் விரத நோற்றதன்பின்
சுடர்க்கதை யேந்துந் துளவ மாலையன்
விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும்
பவுரிகொள் கூத்துடைப் பரமனு நோற்றுக்
கவுரியன் றடைத்த கபாடந் திறந்ததும்
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத்
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும்
நாரத முனிவ னவின்றிடக் கேட்டே
இந்நிலந் தன்னி லிவ்விர தத்தை
மன்னவன் வச்சிர மாலிமுன் னோற்றுக்
காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து
தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
கடைமுறை வெள்ளியங் கைலையி லுற்றான்
பரிவொ டிவ்விரதம் பாரகந் தன்னில்
விரைகமழ் நறுத்தார் விக்ர மாதித்தன்
மறிகடற் புவிபெற வருத்தி நோற்றிடுநாண்
மற்றவன் காத் மடவர லொருத்தி
இற்றிடு மிடையா ளிலக்கண சுந்தரி
மெத்த வன்புடனிவ் விரத நோற்பேனென
அத்தந் தன்னி லணியிழை செறித்துச்
சித்த மகிழ்ந்து சிலநா ளோற்றபின்
உற்ற நோன்பி னுறுதி மறந்து
கட்டிய விழையைக் காரிகை யிவிழ்த்து
வற்றிய கொவ்வையின் மாடே போட
ஆங்கது தழைத்தே யலருந் தளிருமாய்ப்
பாங்குற வோங்கிப் படர்வது கண்டு
வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி
அவ்விய மல்லா ளவ்விடந் தன்னிற்
கொவ்வை யடகு கொய்வாள் குறுகி
இளையது கிடப்பக் கண்டவ ளெடுத்துக்
குழைதசழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி
அப்பமோ டடைகா யவைபல வைத்துச்
செப்ப முடனே திருந்திழை நோற்றிடக்
கரிமுகத் தண்ணல் கரணை கூர்ந்து
பண்டையி லிரட்டி பதமவட் கருள
கொண்டுபோ யரசனுங் கோயிலுள் வைத்தான்
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள
உக்கிர மான உடைமணி கட்டித்
தண்டையுஞ் சிலம்புத் தாளினின் றொலிப்பக்
கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன்
மனமிகக் கலங்கு மன்னவன் றன்னிடங்
கனவினில் வந்து காரண மாக
இலக்கண சுந்தரி யிம்மனை யிருக்கிற்
கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத்
துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக்
கண்ணுறக் கண்ட கனவின் காரணம்
அண்ண லுரைத்திடு மவ்வழி தன்னில்
ஆனை குதிரை யவைபல மடிவுற
மாநகர் கேடுறும் வகையது கண்டு
இமைப் பொழுதிவளிங் கிருக்க லாகாதென
அயற் கடையவனு மகற்றிய பின்னர்
வணிகன் றனது மனைபுந் திருப்ப
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட
அணியிழை தன்னை யவனு மகற்ற
உழவர் தம்மனையி லுற்றவ ளிருப்ப
வளர்பயி ரழிந்து வளம்பல குன்ற
அயன்மனை யவரு மகற்றிய பின்னர்க்
குயவன் மனையிற் கோற்றொடி செல்லக்
குயக்கல முடைந்து கொள்ளை போக
அயற்கடை யவனு மகற்றிய பின்னர்த்
து}சுக ளெல்லாந் துணிந்து வேறாகத்
து}சரு மவளைத் து}ரஞ் செய்ய
மாலைக் காரன் வளமனை புகலும்
மாலை பாம்பாம் வகையது கண்டு
ஞால மெல்லா நடுங்கவந் துதித்தாய்
சாலவும் பாவிநீ தான்யா ரென்ன
வெம்மன மிகவு மேவி முனிவுறா
அம்மனை யவனு மகற்றிய பின்னர்
அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப
அவ்வை செல்லு மகங் கடோறும்
வைதன ரெறிந்தனர் மறியத் தள்ளினர்
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்
அவ்வை மீண்டுதன் னகமதிற் சென்று
இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக்
காத்தான் டுலகு கருணையோ டாண்ட
மார்த்தாண்ட ராசன் மாமக ளொருத்தி
எல்லார்க்கு மூத்தா ளிலக்கண சுந்தரி
சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச்
சீர்கெட விருந்த தெரிவையை நோக்கி
நீரது கொண்டு நிலமெழு கிடுகெனச்
சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள்
சாணியும் புழுத்துத் தண்ணீர் வற்றிப்
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற
மானேர் விழியாள் வருந்துதல் கண்டு
தானே சென்று சாணி யெடுத்துத்
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு
மண்ணிய வீட்டின் மணிவிளக் கேற்றிப்
புத்தக மெடுத்து வாவெனப் புகலப்
புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட
மெத்தவுண் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக்
கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி
அவ்வை தானே யகமதிற் சென்று
புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து
வித்தக நம்பி விநாயக மூர்த்தி
கற்பகப் பிள்ளைசெய் காரிய மிதுவென
உத்தமி யவ்வை யுணர்ந்து முன்னறிந்து
தவநெறி பிழைத்த தையலை நோக்கி
துவலரும் விநாயக னோன்பு நோற்றிடுகெனக்
கரத்து மூவேழிழைக் காப்புக் கட்டி
அப்பமு மவலு மாம்பல பண்டமுஞ்
செப்ப மதாகத் திருமுன் வைத்தே
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு
மத்தகக் களிற்றின் மகா விரதத்தை
வித்தக மாக வியங்கிழை நோற்றுக்
கற்பக நம்பி கருணை பெற்றதற்பின்
சக்கர வாள சைனி யத்தோடு
விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி
எவ்வகை செய்வோ மெனவுள மெலிந்தே
அவ்வை தன்மனை யங்கவ ரணுக
எய்துந் தாகழு மிளைப்புங் கண்டு
செவ்வே யவற்றைத் தீர்க்க வெண்ணி
இலக்கண சுந்தரி யென்பவ டன்னை
அப்பமு நீரு மரசற் கருளெனச்
செப்பிய வன்னை திருமொழிப் படியே
உண்ணீர்க் கரகமு மொரு பணிகாரமும்
பண்ணேர் மொழியாள் பார்த்திபற் குதவ
ஒப்பறு படையு முயர்படை வேந்தனும்
அப்பசி தீர அருந்திய பின்னர்
ஆனை குதிரை யவைகளு முண்டுந்
தானது தொலையாத் தன்மையைக் கண்டே
இவ்வகை சமைத்தநீ யாரென வினவ
மவ்வலங் குழலாண் மௌனமாய் நிற்ப
அவ்வவை தான்சென் றரசற் குரைப்பாள்
கணபதி நோன்பின் காரணங் காணிது
குணமுடை யிவளுன் குலமனை யாட்டி
இலக்கண சுந்தரி யென் றவை கூற
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து
திங்கணேர் வெள்ளிச் சிவிகையி னேற்றிக்
கொண்டூர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்டொடி யாரி லுயர்பத முதவினன்
சிந்துர நுதலார் சென்றடி பணியச்
சுந்தரி யிருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com